ராமர் பாலம் : மத்திய அரசு தவறான முன்னுதாரணம்!
செப்டம்பர் 18, 2007
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத் திட்டுக்கள் மனிதனால் கட்டப்பட்டவை அல்ல, இயற்கையானதுதான் என்றும், அது ராமர் பாலம் என்பதற்கு எந்தவிதமான மறுக்க முடியாத ஆதாரம் என்று ஏதுமில்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்த தொல்லியல் துறை, அவதாரம் என்று கருதப்படும் ராமர் வாழ்ந்ததற்கோ அல்லது ராமாயணம் நடந்ததாகக் கூறுவதற்கோ தொல்லியல் ரீதியான ஆதாரம் ஏதுமில்லை என்று தனது மனுவில் தெளிவாகக் கூறியிருந்தது.
ஆனால், இதனை ராமர் எனும் கடவுளை மறுப்பதாக மத்திய அரசு மனு செய்துள்ளது என்று பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் பிரச்சனையாக்க, ஏற்கனவே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினால் தடுமாறிக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மற்றொரு பிரச்சனையை எதிர்கொள்ளத் தயங்கி, உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றது.
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்தது என்று சமாதானம் சொல்லிக் கொண்ட நிலையில், அந்த மனுவை தயாரித்ததாக கூறப்பட்ட தொல்லியல் துறை உயர் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ததுதான் என்ன நியாயம் என்று தெரியவில்லை.